- அக்டோபர் 16, 2025
அன்னை அம்பிகைக்கு ஒன்பது ராத்திரி நவராத்திரி,
அப்பன் சிவனுக்கு ஒரே
ராத்திரி சிவராத்திரி….
மாதத்தில் ஒரு முறை
வரும் சிவராத்திரி
மாசிமாதம் வருவதோ
மஹா சிவராத்திரி….
சிவாய நம என விரதம்
இருப்போர்க்கெல்லாம்,
அபாயம் நீக்கும் ராத்திரி…
சிவ புராணங்களில்
உள்ள கூற்றின் படி,
பல நிகழ்வுகள் நடந்த
ராத்திரி சிவராத்திரி..
பிரளய காலத்தில்
பிரமனால் சிஷ்டித்த
அனைத்து உயிர்களையும்
அழிவிலிருந்து காப்பாற்ற ,
அன்னை உமாதேவி
அன்போடு விரதமிருந்து
ஈசனை பூஜித்த ராத்திரி
இந்த சிவராத்திரி…..
தேவர்களும் அசுரர்களும் பார்கடலை கடைந்தபோது
பொங்கிவந்த
ஆலகால விஷத்தை
அண்டத்தைக் காக்க தன்
கண்டத்தில் ஏற்று
நீலகண்டனாய் மாறிய ராத்திரி இந்த சிவராத்திரி
பரமேஸ்வரனின்
இடப்பாகத்தை அன்னை
பார்வதி பெற்ற தினம்
இந்த சிவராத்திரி….
பிரம்ம தேவருக்கும்
திருமாலுக்கும் பெரும்
ஒளிபிழம்பாய்
லிங்கோத்பவராய்
காட்சி அளித்த தினம்
இந்த சிவராத்திரி…
அர்ஜுனன் சிவனை நினைத்து மூங்கில்காட்டில்,
தவம் புரிய,
அர்ஜுனனை அழிக்க
பன்றி உருவில் வந்த
அரக்கனை, வேடன் உருவில் வந்த சிவபிரான் அழித்து,
அர்ஜுனனுக்கு
பாசுபதாஸ்திரம் அளித்த
நாள் இந்த சிவராத்திரி…
கண்ணப்பன் தன் கண்களை
ஈசனுக்கு கொடுத்து
முக்தி அடைந்த நாள்
இந்த சிவராத்திரி….
இந்திரன் தேவலோக
அதிபதியான நாளும்
இந்த சிவராத்திரியே…
குபேரன் செல்வத்தின்
அதிபதியான நாள்
இந்த சிவராத்திரி….
மார்கண்டேயனுக்காக
எமனை சிவபிரான்
காலால் உதைத்த நாள்
இந்த சிவராத்திரி…
புலிக்கு பயந்த வேடன்
வில்வ மரத்தில்
மேல்ஏறி அமர்ந்து அச்சத்தில் இலைகளை பறித்துப் போட
கீழே இருந்த லிங்கத்தில்
மேல் பட்டு வேடன் முக்திபெற்ற
நாள் இந்த சிவராத்திரி…
வில்வ இலைகள்
சிவபிரானுக்கு உகந்ததாக
மாறிய நாளும்
இந்த சிவராத்திரி….
இன்பத்தையும்
மங்களத்தையும்
நிறைவான
வாழ்கையையும் தரும்
ராத்திரி இந்த சிவராத்திரி…..
எழுதியவர்: வெ. உமா
