×
Tuesday 9th of December 2025

அருள்மிகு வல்லக்கோட்டை முருகன் கோவில்


Last updated on நவம்பர் 22, 2025

vallakottai murugan temple entrance gopuram

வல்லக்கோட்டை முருகன் கோவில் வரலாறு

திருத்தலம் வல்லக்கோட்டை முருகன் கோவில்
மூலவர் சுப்பிரமணியசுவாமி (கோடை ஆண்டவர்)
தல விருட்சம் பாதிரி மரம்
தீர்த்தம் வஜ்ஜிர தீர்த்தம்
ஊர் வல்லக்கோட்டை
மாவட்டம் காஞ்சிபுரம்

🛕 பண்டைக் காலம் தொட்டு இன்றுவரை தமிழர்கள் முருக வழிபாட்டை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார்கள். அதற்கு ஆதாரம் பண்டையக் காலத்திலும் முருகனுக்கு ஆலயங்கள் இருந்துள்ளது என்பதே. புறநானூறு என்ற நூல் முருகன் கோட்டம் என்பதைப் பற்றிக் குறிப்பிட்டு உள்ளது. கோட்டம் என்றால் கோட்டை என்று அர்த்தம்.

🛕 புறநானூறில் முருகனைப் பற்றிய குறிப்பு உள்ளது. திருச்செந்தூர் முருகனை செந்தில் என்று அழைத்தார்கள். பழங்காலத்தில் திருச்செந்தூருக்கு அல்வாய் என்ற பெயரும் இருந்தது. அகநானூறு நூலில் திருப்பரங்குன்றம் முருகன் ஆலயத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. அதில் வருடம் முழுவதும் இடைவிடாது பல்வேறு விழாக்கள் தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தன எனவும், அந்த விழாக்களில் மதுரையில் இருந்தவர்கள் பெருமளவில் கலந்து கொண்டார்கள் என்றும் அந்தப் பாட்டில் கூறப்பட்டு உள்ளது.

🛕 பண்டையத் தமிழர்கள் காடுகள், நதிகள், தீவுகள், சாலை ஓரங்கள், குளங்கள், புத்தம் புதிய கடம்பு மரங்கள் மற்றும் பொது இடங்களில் எல்லாம் பண்டையத் தமிழர்கள் முருக வழிபாட்டை தொடர்ந்து கொண்டு இருந்தார்கள் என்பதை திரு முருகாற்றுப் படை தெரிவித்ததின் மூலம் அந்த இடங்களில் பெருமளவு முருகனின் வழிபாடு நடந்து கொண்டு இருந்துள்ளது என்ற செய்தி தெரிகின்றது. இந்தக் கட்டுரை வல்லக் கோட்டை முருகனின் ஆலயத்தைப் பற்றிய வரலாற்று உண்மைகளை ஆராய்கின்றது.

vallakottai subramaniyaswami with valli and deivanai

🛕 வல்லகோட்டை என்ற இடம் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ளது. வல்லக்கோட்டை ஆலயம் சென்னை நகரின் புறப் பகுதியான தாம்பரத்தில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவிலும், ஸ்ரீ பெரம்பத்தூரின் தெற்குப் பகுதியில் இருந்து சுமார் பன்னிரண்டு கிலோ தொலைவில் ஸ்ரீபெரம்பத்தூர்- செங்கல்பட்டு வழித் தடத்தில் உள்ளது. அருணகிரிநாதர் இயற்றியப் பாடல்களில் வல்லக்கோட்டையை கோட்டை நகர், கோட்டையாம் பட்டி, கோடை எனும் பட்டி , மற்றும் கோட்டை என்றெல்லாம் கூறி உள்ளார். அருணகிரிநாதர் இந்த ஆலயத்தைப் பற்றி பல பெயர்களில் எழுதி இருந்தாலும் அந்த ஆலயத்தை வல்லக்கோட்டை என்றே தற்போது அழைக்கின்றார்கள். அந்த ஆலயத்திற்கு அந்தப் பெயர் வந்ததற்கான பல காரணாங்கள் கூறப்பட்டாலும் அவற்றில் ஒரே ஒரு காரணம் மட்டும் ஏற்றுக் கொள்ளும் வகையில் உள்ளது.

🛕 காஞ்சீபுரம் மாவட்டத்தில் வல்லக்கோட்டைக்கு அருகில் உள்ள திருப்பட்டியில் ஒரு முருகன் ஆலயம் வல்லம் என்ற பெயரில் இருந்தது. அதனால்தான் அந்தப் பெயரையும் சேர்த்தே பண்டையக் கால மக்கள் வல்லம் என்ற இருந்த இடத்தில் உள்ள கோட்டை என்பதை மருவி வல்லக்கோட்டை என அழைத்தார்கள். எது எப்படி இருந்த போதிலும் முருகனுக்கு ஆலயம் அமைத்த பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அதாவது எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து இருந்த அருணகிரிநாதரின் காலத்துக்கும் முன்பே அந்த ஆலயம் இருந்து இருக்க வேண்டும் என்பதின் காரணம் அந்த ஆலயத்தின் பெருமையை அருணகிரிநாதர் தான் இயற்றிய ஏழு பாடல்கள் மூலம் கூறி உள்ளார். (பாடல்கள் 707 முதல் 713 வரை, பாகம் – 4. அருணகிரிநாதரின் திருப்புகழ்: வெளியிட்டோர் சைவ சித்தாந்தக் கழகம்)

வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைப்பு

🛕 ஆலயத்தில் உள்ள சிற்பங்களில் முக்கியமாக நிற்கும் நிலையில் வடிவமைகபட்டு உள்ள வள்ளி மற்றும் தெய்வானை சிலைகள் பல்லவ நாட்டுக் கலைவண்ணத்தை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளது. சிவன் மற்றும் விஷ்ணுவிற்கு பல்லவர்கள் பல இடங்களிலும் ஆலயங்களை எழுப்பி உள்ளார்கள். ஆராய்ச்சியில் கிடைத்த ஆவணங்கள் மூலம் கோட்டை நகரில் உள்ள வல்லம் ஆலயமும் அவற்றில் ஒன்று எனத் தெரிகின்றது.

🛕 பல்லவர்களின் சிற்பக் கலை எப்படி இருந்தது என்றால் அவர்கள் எழுப்பிய ஆலயங்கள் அனைத்துமே பாறைகளைக் குடைந்து , அதில் இருந்த பாறைகளின் மீதே சிற்பங்கள் செதுக்கப்பட்டு உள்ளன. மேலும் அவற்றை செதுக்குவதற்கு கற்களையோ, ஜல்லிகளையோ அல்லது மற்ற எந்த விதமான உலோகங்களையோ அவர்கள் பயன்படுத்தவில்லை. அப்படிப்பட்ட பொருட்களை பயன்படுத்தாமல் சிற்பங்களை எப்படி வடிவமைத்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் எனில் வல்லக்கோட்டை ஆலயத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தமது ஆராய்ச்சியில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு வலுவான காரணம் அந்த குகை சிற்பங்களை செய்ய பயன்படுத்தியதாக கூற அப்படிப்பட்டப் எந்தப் பொருட்களுமே ஆராய்ச்சியாளர்களுக்கு இதுவரைக் கிடைக்கவில்லை.

🛕 பழுதடைந்து இருந்த ஆலயம் தற்போது புதுப்பிக்கப்பட்டு விட்டதினால் அங்கு பக்தர்களும் பெருமளவில் வருகின்றார்கள் என்பதில் இருந்தே அந்த ஆலயம் எந்த அளவு மகிமைப் பெற்று இருந்திருக்கும் என்பதை தெரிந்து கொள்ள முடியும் . தனி நபர்களின் நன்கொடையினால் மட்டும் அந்த ஆலயத்தை புதுப்பிக்க முடியாது. அதற்கு பெரும் அளவு நன்கொடைகள் வேண்டும் என்பதினால் கிருபானந்தவாரியார், மயிலை ரத்னகிரி முருகன் அடிமை ஸ்வாமிகள் மற்றும் சுவாமி ராமதாஸ் போன்றவர்கள் பெரும் முயற்சிகளை எடுத்துக் கொண்டு அதைப் புதுப்பித்து கும்பாபிஷேகமும் செய்தார்கள்.

🛕 எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னால் அந்த ஆலயத்தின் பெருமையை அருணகிரிநாதர் பாடியுள்ளார் என்பதினால் அந்த ஆலயம் நிச்சயமாக எழுநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருந்திருக்க வேண்டும். அவர் அந்த ஆலயம் உள்ள இடத்துக்கு சென்றபோது அந்த ஆலயத்தின் தலவிருட்சம் – பட்டரி என்ற மரத்தின் அடியில்தான் அவர் முருகனின் அருளைப் பெற்றார். அப்போது ஆலயம் போன்று தோற்றம் தரும் எதுவுமே அங்கு இல்லை.

vallakottai subramaniyaswami

புராணக் கதைகள்

🛕 இலான்சி ராஜ்யத்தின் மன்னனான பகீரதன் என்பவனே அந்த ஆலயத்தை நிர்மாணித்து உள்ளார். ஆனால் அந்த மன்னன் ஆண்ட காலம் எது என்பது தெரியவில்லை. அவர்தான் கங்கையை பூமிக்கு கொண்டு வந்த பகீரதனா என்பதும் தெரியவில்லை. இலான்சி என்பது மிகச் சிறிய ராஜ்ஜியம். அப்படி என்றால் அத்தனை தொலைவில் இருந்து அவர் ஏன் இங்கு வந்து பல்லவர்கள் ஆண்ட பூமியில் ஆலயத்தை நிர்மாணித்து இருக்க வேண்டும்? அதற்கு ஸ்தல புராணத்தில் விடை உள்ளது. பகீரதன் மிகவும் கர்வம் பிடித்தவன். ரிஷி முனிவர்களை மதித்தது இல்லை. ஒருமுறை நாரதர் அவனிடம் வந்தபோது அவரை உட்காரச் சொல்லாமல் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டானாம். அதனால் நாரத முனிவர் வருத்தம் அடைந்தார். அப்போது எதிர் திசையில் இருந்து கோரன் எனும் அசுரன் பெரும் படையுடன் வந்து கொண்டு இருந்தான். நாரதரைக் கண்ட அவன் எந்த விதமான கர்வமும் இன்றி அவர் அருகில் சென்று அவரை வணங்கினான். ஆகவே அவன் மூலமே பகீரதனுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என நாரதர் எண்ணினார்.

🛕 கோரனிடம் நாரதர் அந்த பெரும் படையுடன் அவன் எங்கு செல்கிறான் எனக் கேட்க அவனும் தான் ஒரு அஸ்வமேத யாகம் செய்ய உள்ளதினால் அதற்கு முன் நூறு மன்னர்களை வெல்ல வேண்டி உள்ளது என்றும் அதற்காக அவன் படையுடன் செல்வதாகக் கூற, அதைக் கேட்ட நாரதர் அவனை இலான்சி நாட்டு மன்னன் மீது படையெடுத்து அவனை வென்றப் பின் பின் மற்ற நூறு மன்னர்களையும் வென்று அஸ்வமேத யாகத்தை நடத்துமாறுக் கூற அவனும் நாரதரின் அறிவுரையை ஏற்று பகீரதன் மீது படை எடுத்து அவன் நாட்டைப் பிடித்துக் கொள்ள பகீரதனும் நாட்டை விட்டு தப்பிச் சென்று என்ன செய்வது எனப் புரியாமல் அங்கும் இங்கும் அலைந்தான். ஒருநாள் வழியில் அவன் நாரத முனியைக் கண்டான். ஓடோடிச் சென்று அவர் கால்களில் விழுந்து தான் செய்த அவமரியாதைக்கு மன்னிப்புக் கோரி அவரை தனக்கு உதவுமாறு வேண்டினான். அப்போது அவனது கர்வமும், ஆணவமும் முற்றிலும் அழிந்து போய் இருந்தது. ஆகவே அவன் மீது கருணைக் கொண்ட நாரதரும் அவனிடம் துர்வாச முனிவரை சந்தித்து அவரிடம் அதற்கு வழி கேட்குமாறுக் கூறி அனுப்பினார்.

🛕 அவனும் தயங்காமல் அங்கிருந்து கிளம்பிச் சென்று துர்வாச முனிவரிடம் தான் இழந்த வீடுகளையும் நாட்டையும் திரும்பிப் பெற தனக்கு உதவுமாறுக் கூற அவரோ அவன் இழந்து விட்ட ராஜ்ஜியத்தை மீண்டும் திரும்பப் பெற வேண்டும் எனில் அப்படியே தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட திசை வழியே சென்று கொண்டு இருந்தால் ஒரு இடத்தில் முருகன் தனது இரண்டு மனைவிகளுடன் ஒரு பட்டரி மரத்தின் கீழ் வாசம் செய்வதைக் காண முடியும் என்றும், அங்கு சென்று வெள்ளிக் கிழமைகளில் விரதம் இருந்து அவரை வழிபட்டால் விடிவு காலம் பிறக்கும் என்றார். பகீரதனும் அவர் கூறியபடியே அங்கும் இங்கும் சுற்றியப் பின் கோட்டை நகரை அடைந்தார். துர்வாச முனிவர் கூறிய அனைத்து அடையாளங்களும் அங்கு இருந்தன. ஆகவே அவன் முனிவர் கூறியபடியே அங்கு தவம் இருந்து முருகனின் அருளினால் தான் இழந்த அனைத்தையுமே சில காலங்களில் திரும்பப் பெற்றான். அதனால் மனம் மகிழ்ந்து அவன் அந்த இடத்தில் முருகனுக்கு ஆலயம் ஒன்றை அமைத்தான்.

🛕 அந்தக் கட்டத்தில்தான் திருபோரூரில் இருந்து திருத்தணிக்கு சென்று கொண்டு இருந்த அருணகிரிநாதர் முருகனின் இருப்பிடமான பட்டரி மரம் இருந்த இடத்தை அடைந்தார். அதன் அருகில் இருந்தக் குளத்தின் அருகில் இருந்த இன்னொரு மரத்தின் அடியில் சென்று உறங்கியவர் “என்னை மறந்து விட்டாயா அருணகிரி? “என்றக் குரல் கேட்டு எழுந்தார். அந்தக் குரல் மூன்று முறை ஒலித்தது. எழுந்தவர் குரல் கொடுத்தவரைத் தேடினார். அருகில் யாருமே தென்படவில்லை.

🛕 அப்போது அவர் பட்டரி மரத்தின் அடியில் அமர்ந்து இருந்த முருகனைக் கண்டு ஆனந்த கூத்தாடி அவர் மீது ஏழு பாடல்களைப் திருப்புகழ் என்ற பெயரில் பாடினார். வல்லக்கோட்டை ஆலயத்தை கோட ஆண்டவர் ஆலயம் என்று அழைத்தார்கள். அந்த ஆலயத்தில் உள்ள முருகனின் சிலைக்கு ஈடாக தமிழ் நாட்டில் வேறு எங்குமே ஒரு சிலைக் கிடையாது. கடந்த பத்து ஆண்டுகளாக அந்த ஆலயம் புகழ் பெற்று விளங்குகிறது. முன்னர் அந்த ஆலயத்துக்ல்கு மக்கள் செல்ல வாகன வசதிகள் இல்லாத நிலையில் இருந்ததினால் இன்று உள்ளதைப் போல அது அப்போது பிரபலம் அடையவில்லை. ஆஅனால் இப்போதோ அந்த ஆலயத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் செல்ல முடிகின்றது. அங்குள்ள இரண்டு மீட்டர் உயரமுள்ள முருகனின் சிலையைக் கண்டு மக்கள் பரவசம் அடைகிறார்கள்.

🛕 ஞாயிற்றுக் கிழமைகளில் மகாபிஷேகம் நடைபெறுகின்றது. சென்னையில் இருந்தும் அதை சுற்றி உள்ளப் பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் விடுமுறை நாட்களிலும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் அங்கு வருகிறார்கள். அப்போது அங்கு அன்னதானமும் நடை பெறுகின்றது.

🛕 தமிழ் புத்தாண்டு, கிருத்திகை, சஷ்டி போன்ற தினங்களில் விசேஷ பூஜை நடைபெறுகின்றது. 1997 ஆம் ஆண்டு முதல் சில பக்தர்கள் ஒன்றிணைந்து அந்த ஆலயத்தை சுத்தம் செய்து அங்கு வரும் பக்தர்களுக்கு பயனுள்ள முறையில் ஆலய வளாகத்தை மாற்ற முயற்சிகளை எடுத்து வந்துள்ளனர். அந்த முயற்ச்சியின் முதல் கட்டமே ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் நடைபெறும் அன்னதான நிகழ்ச்சி. முன்பெல்லாம் அந்த ஆலயத்துக்கு வருகை தரும் மக்கள் ஆலய தரிசனம் செய்தப் பின் தமக்கும் தமது குழந்தைகளுக்கும் உணவு அருந்த நல்ல உணவகம் இருக்குமா என்று கவலைப்படுவது உண்டு. அந்தக் குறையைக் களையவே பூஜை முடிந்ததும் அன்னதானம் நடைபெறும் இடத்தில் சென்று உணவு அருந்தி விட்டுப் போக வேண்டும் என அங்கு வருகை தருபவர்கள் அனைவரையும் ஆலய நிர்வாகிகள் அழைப்பார்கள். ஆகவே தங்களை ஒரு விருந்தாளி போலவே நினைத்து உணவு தருவதாக மக்கள் நினைக்கின்றார்கள்.

vallakottai temple theertham

🛕 அதுவும் முருகன் அருளே என நினைக்கும் பக்தர்களால் நிம்மதியாக பூஜைகளில் கலந்து கொள்ள முடிகின்றது. ஆலயத்தின் வெளியில் காலணிகளை விட்டுச் சென்றால் அதற்கான எண் கொண்ட சீட்டு தருகிறார்கள். ஆகவே அவர்கள் திரும்பிச் செல்லும்வரை அந்தக் காலணிகள் பாதுகாப்பாக உள்ளன. முன்பெல்லாம் அன்னதானத்தில் 50க்கும் குறைவானவர்களே பங்கேற்ப்பார்கள். ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை வளர்ந்து 500 முதல் 600 பேர் வரை உயர்ந்து, கிருத்திகை போன்ற தினங்களில் 1500 பேர்வரை உணவு அருந்தும் வகையில் விரிந்துள்ளது. முன்பெல்லாம் தனி நபர்களின் வீடுகளில் அன்னதான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஆனால் அதில் சிலர் ஆதாயம் அடையத் துவங்கியதினால் தற்போது வல்லக்கோட்டை சன்னதித் தெருவிலேயே ஒரு கொட்டகை அமைக்கப்பட்டு அங்கு அன்னதானம் செய்யப்படுகின்றது.

பிரார்த்தனை: இத்தல இறைவனை வழிபட வரும் பக்தர்கள் இந்த தீர்த்தத்தில் நீராடி முருகனை வழிபட்டால் வினைகள் நீங்கும் என்பது ஐதீகம்.

நேர்த்திக்கடன்: பால்குடம், முடிகாணிக்கை செலுத்துதல், காது குத்தல் ஆகிய நேர்ச்சைகள் செய்யலாம். திருமணங்களும் நடத்தப்படுகிறது.

திருவிழா: அறுபடை வீடு போன்று புகழ்பெற்ற இக்கோவிலுக்கு பரணி, கார்த்திகை நாட்களிலும், மற்றும் முருகனுக்குரிய அனைத்து விசேஷ நாட்களிலும் விசேஷ பூஜை நடக்கிறது.

வல்லக்கோட்டை முருகன் கோவில் திறக்கும் நேரம்

அருள்மிகு வல்லக்கோட்டை முருகன் கோவில் காலை 06:00 மணி முதல் 01:00 மணி வரை மாலை 04:30 மணி முதல் இரவு 08:30 மணி வரை திறந்திருக்கும்.

 The temple rituals/poojas are performed five times a day:

  1. Gho Puja 6:15 am
  2. Kalasandhi at 8:00 am
  3. Uchikala Puja at 10:00 am
  4. Sayarakshai at 6:00 pm
  5. Arthajama Puja at 8:15 pm

vallakottai murugan temple timings

Also read,

கோவில் முகவரி

இதைப் பதிவேற்றியவர்..

Dineshgandhi

நான் தினேஷ், Aanmeegam.org வலைத்தளத்தின் நிறுவனர். 2018 ஆம் ஆண்டு Blogger மூலம் ஆரம்பித்து 2020 இல் WordPress-க்கு மாறினேன். ACCET, காரைக்குடியில் MCA முடித்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த SEO நிபுணராகவும், ஆன்மிக பதிவாளராகவும் செயல்படுகிறேன்.

Read full bio →


One thought on "அருள்மிகு வல்லக்கோட்டை முருகன் கோவில்"

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

purasawalkam-gangadeeswarar-temple
  • நவம்பர் 14, 2025
அருள்மிகு கங்காதரேசுவரர் திருக்கோவில், புரசைவாக்கம்
  • அக்டோபர் 26, 2025
சிக்கல் சிங்காரவேலவர் திருக்கோவில் [நவநீதேஸ்வரர் ஆலயம்]
Arogara to Lord Murugan
  • அக்டோபர் 25, 2025
அரோகரா என்றால் என்ன?