×
Saturday 26th of July 2025

ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், பெருநா


Last updated on மே 16, 2025

sree subramanya swami temple perunna changanassery kerala

Sree Subramanya Swami Temple, Perunna

ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பெருநா

🙏 வேலின்றி முருகனை எங்குமே காண இயலாது. ஆனால் வேலைத் தலைகீழாகப் பிடித்து நிற்கும் திருக்கோலத்தில் முருகன் அருள்பாலிக்கும் ஆலயம் ஒன்று இருக்கிறது.

🙏 இவ்வாலயம், கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கனாச்சேரி அருகே உள்ள பெருநா என்ற ஊரில் அமைந்துள்ளது.

🙏 ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பெருநா, சங்கனாச்சேரி, கோட்டயம், கேரள மாநிலம்.

🙏 இங்கு தாரகாசுரனைச் சங்கரித்த முருகப்பெருமான், வேலைத் தலைகீழாகப் பிடித்து நிற்கும் தோற்றத்தில் அருள்பாலிக்கின்றார்.

Perunna Murugan Temple History

 தலவரலாறு கூறும் செய்திகள்:  உம்பிளி மற்றும் பெருநா எனும் இரு கிராமங்களில் அந்தணர்கள் வசித்து வந்தனர். பெருநா எனுமிடத்தில் வசித்த சாத்விக குணம் கொண்ட அந்தணர்கள் சிவ பக்தர்கள். உம்பிளியில் வாழந்த மாய, தந்திர வேலைகளைச் செய்யும் அந்தணர்கள் பெருநா மக்களின் மீது பொறாமை கொண்டு உம்பிளி பகுதி மக்களின் சிவன் கோவிலை இடித்து சேதப்படுத்தினர். அப்போது பெருநா ஊர் மக்கள் சிவப்பரம்பொருள் சிலையை மட்டும் பாதுகாப்பாக மீட்டனர்.

🙏 இவர்களின் பிணக்கைத் தீர்ப்பதற்காக இடமனா இல்ல நம்பூதிரி என்பவர் பழனி முருகன் கோவிலுக்குப் புனிதப்பயணம் சென்றார். அங்கு காட்சியளித்த பழனி முருகப்பெருமான், “பத்தினம்திட்டா மாவட்டத்தில் செல்லும் கொடுந்துறா ஆற்றில் கிடைக்கும் தனது சிலையை எடுத்து வழிபட்டு வந்தால், அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்” என்றார்.

🙏 அதன் படி இடமனா நம்பூதிரி ஆற்றில் கிடைத்த சிலையை எடுத்துச் சென்று பெருநா கிராமத்தில் நிறுவினார். விடயம் அறிந்த உம்பிளியினர் பெருநா முருகன் கோவிலை அழிக்க முயன்றனர். இதனைக் தடுப்பதற்காக இடமனா நம்பூதிரி, அவரது நண்பரான காரணவர் என்பவருடன் உம்பிளியை நோக்கிச் சென்ற போது வழியில், உம்பிளி கிராமத்தினர் செய்த மாய, தந்திரங்களால், நெருப்புப் பந்து ஒன்று உருவாகி அது கோவிலை அழிக்கும் வேகத்துடன் வந்து கொண்டிருந்தது. இடமனா நம்பூதிரி அதனைத் தடுக்க, போது இந்த பூஜையில் காரணவர் பலியானார் இருப்பினும் பூஜையை தொடர்ந்து செய்த இடமனா நம்பூதிரி அந்தத் தீயசக்தியை முழுவதுமாகக் கட்டுப்படுத்தினார்.

🙏 அதன் பிறகு, உம்பிளி கிராமத்தினர் செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. பிற்காலத்தில் உம்பிளி கிராமமே முற்றிலும் அழிந்து காடாக மாறிப் போய்விட்டதாக ஆலய வரலாறு சொல்கிறது.

🙏 இக்கோவிலில் நிறுவப்பட்டிருக்கும் முருகன் சிலை, முன்பொரு காலத்தில் முனிவர்கள் மற்றும் தேவர்களாலும் வணங்கப்பட்டு வந்தது என்று கூறப்படுகிறது.

 முருகனின் தோற்றத்திற்கான காரணம்:  சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய முருகப்பெருமான் அசுரர்களை அழிக்கப் போருக்குச் செல்லும் போது முருகப்பெருமானை வாழ்த்திய தந்தை சிவப்பரம்பொருள், அவருக்குப் பதினொரு ஆயுதங்களைக் கொடுத்தார். தாய் பார்வதிதேவி தன்னுடைய சக்தி அனைத்தையும் சேர்த்து வேல் ஒன்றை உருவாக்கிக் கொடுத்தார்.

🙏 முருகப்பெருமான் தாரகாசுரனுடன் போரிடும் போது முருகப்பெருமானின் தாக்குதலைச் சமாளிக்க முடியாத தாரகாசுரன் எலியாக மாறி, கிரவுஞ்ச மலைக்குள் சென்று பல மாய வித்தைகளைக் காட்டத் தொடங்கினான். அதனைக் கண்டு கோபமடைந்த முருகப்பெருமான், தாய் தந்த வேலாயுதத்தைக் கையில் எடுத்து அந்த மலையை நோக்கி வீசியெறிந்தார். அந்த வேல் கிரவுஞ்ச மலையைப் பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து, தாரகாசுரனையும் அழித்துத் திரும்பியது.

🙏 தாரகாசுரனை அழித்த இரத்தம் படிந்த வேலை கையில் பிடித்த முருகப்பெருமான், வேலில் படிந்திருந்த இரத்தம் மண்ணில் இறங்கும்படியாக வேலைத், தலைகீழாகத் திருப்பி தரையில் ஊன்றி நின்றார்.

🙏 முனிவர்களும், தேவர்களும் மூன்று அசுரர்களில் ஒருவன் அழிந்ததை எண்ணி மகிழ்ந்து, முருகப்பெருமானை வாழ்த்தினர்.

🙏 சில முனிவர்கள் முருகப்பெருமானைத் தாங்கள் கண்ட அதே தோற்றத்தில் சிலையமைத்து வழிபட்டு வந்தனர்.

🙏 அந்தச் சிலையே பிற்காலத்தில் இடமனா நம்பூதிரிக்குக் கிடைத்தது என்று சொல்லப்படுகிறது.

🙏 இதனையே அவர் பெருநாவில் ஆலயம் அமைத்து வழிபட்டதாக நம்பப்படுகின்றது.

Perunna Subramanya Swami Temple Architecture

 கோவில் அமைப்பு:  கேரளக் கட்டுமானப்பணிகளுடன் அமைந்திருக்கும் இக்கோவிலின் கருவறையில், ஆறடி உயரத்திலான முருகப்பெருமான் கிழக்கு திசை நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருங்காட்சி நல்குகிறார்.

🙏 அவரது கையில் இருக்கும் வேல், தலைகீழாக இருக்கிறது. கோவில் வளாகத்தில் மகாகணபதி, சிவப்பரம்பொருள், மகாவிஷ்ணு, நாகர்கள் உள்ளிட்ட பல தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப் பெற்றிருக்கின்றன.

🙏 இந்த ஆலயத்தில் மலையாள நாட்காட்டியின்படி, தனு (மார்கழி) மாதம் பத்து நாட்கள் நடைபெறும் ‘பள்ளிவேட்டை விழா’ சிறப்பானதாகும். இவ்விழா நாட்களில் சாக்கியார் கூத்து உள்ளிட்ட கேரள மரபு வழி கலைநிகழ்ச்சிகள் பல நடத்தப்படுகின்றன. மகரம் (தை) மாதம் வரும் தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடக்கிறது. பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

 

Perunna Subrahmanya Swami Special

 இறை அருளின் சிறப்பு:  இக்கோவிலுக்கு வந்து வழிபடுபவர்களுக்கு எதிரிகளின் தொல்லைகள் அனைத்தும் நீங்கும். வளமான வாழ்வு கிடைக்கும். தீராத நோயால் அவதிப்படுபவர்கள், காவடி எடுத்து வந்து வழிபடுவதாக வேண்டிக் கொண்டால், அவர்களின் நோய் நீங்கி நலம் பெறுகிறார்கள்.

🙏 மகரம் (தை) மாதம் வரும் தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடக்கிறது. பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.மலேயா பத்து மலைத் தைப்பூசம் போன்று விமரிசையாக நடைபெறுகிறது.கேரளமக்களின் முருக பக்தி மெய் சிலிர்க்க வைக்கிறது.

Perunna Subrahmanya Swami Temple Timings

Morning Worship Timing
05:30 AM to 12:00 PM
Evening Worship Timing
05:30 PM to 08:30 PM

 

Also read,

Perunna Subrahmanya Swami Temple Address

Perunna, Changanassery, Kerala 686102

இதைப் பதிவேற்றியவர்..

Dineshgandhi

நான் தினேஷ், Aanmeegam.org வலைத்தளத்தின் நிறுவனர். 2018 ஆம் ஆண்டு Blogger மூலம் ஆரம்பித்து 2020 இல் WordPress-க்கு மாறினேன். ACCET, காரைக்குடியில் MCA முடித்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த SEO நிபுணராகவும், ஆன்மிக பதிவாளராகவும் செயல்படுகிறேன்.

Read full bio →


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

thimiri-kumaragiri-murugan-temple-entrance
  • ஜூலை 21, 2025
குமரகிரி முருகன் கோவில், திமிரி: ஒரு சக்தி வாய்ந்த மலைக்கோவில்
lord-subramanya
  • ஜூலை 15, 2025
ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய பஞ்ச ரத்னம் (ஸ்ரீதர அய்யாவாள் அருளியது)
nitya-kalyana-perumal-temple-tiruvidandhai
  • ஜூலை 12, 2025
அருள்மிகு நித்ய கல்யாணப் பெருமாள் கோவில், திருவிடந்தை