- மார்ச் 28, 2026
Last updated on ஏப்ரல் 18, 2026
“குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்” என்பார்கள். அந்த வகையில் சென்னையை அடுத்த குன்றத்தூரில் குன்றின் மீது அமர்ந்து அருள்பாலிக்கும் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நான் சென்ற அனுபவங்களையும், இக்கோவிலின் சிறப்புகளையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
| மூலவர் | சுப்பிரமணியசுவாமி |
| தல விருட்சம் | வில்வம் |
| தீர்த்தம் | சரவணபொய்கை |
| ஆகமம்/பூஜை | சிவாகமம் |
| ஊர் | குன்றத்தூர் |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
குன்றத்தூர் முருகன் கோவில் படிகள் எண்ணிக்கை: இந்த அழகான கோவில் 84 படிக்கட்டுகள் கொண்ட சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது.
எங்களது பயண அனுபவம்: நாங்கள் முதல் முறை சென்றபோது பலத்த மழை பெய்ததால், படிக்கட்டுகள் வழியாக ஏற முடியவில்லை. அதனால் ஒரு ஆட்டோ அண்ணாவை அழைத்துக்கொண்டு நேரடியாக மலையின் உச்சிக்கே சென்றுவிட்டோம். ஆனால் மற்ற இரண்டு முறையும் அந்த 84 படிக்கட்டுகளையும் ஏறிச் சென்று முருகனைத் தரிசித்தது மனதிற்கு மிகுந்த திருப்தியைத் தந்தது.
தனித்துவமான சன்னதி: இக்கோவிலில் முருகன் சன்னதிக்கு நேரே நின்று பார்த்தால், முருகன் மட்டுமே தெரிவார். வள்ளி, தெய்வானையைக் காண முடியாது. சன்னதிக்கு இடப்புறம் அல்லது வலப்புறம் சாய்ந்து பார்த்தால் மட்டுமே வள்ளி அல்லது தெய்வானையுடன் முருகனைத் தரிசிக்க முடியும்.
தரிசன டிக்கெட்: நாங்கள் சென்ற மூன்று முறையுமே கோவிலில் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. எனவே நேரத்தை மிச்சப்படுத்தவும், நிம்மதியாகத் தரிசிக்கவும் ஒவ்வொரு முறையும் 100 ரூபாய் தரிசன டிக்கெட் பெற்றுக்கொண்டோம்.

திருப்போரூரில் அசுரர்களுடன் போரிட்டு வென்ற முருகப்பெருமான், சாந்தமடைந்து திருத்தணிக்குச் சென்றார். வழியில் சிவபூஜை செய்ய எண்ணி, இக்குன்றில் தியானம் செய்தார். இங்கு ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்தார். பிற்காலத்தில் குலோத்துங்க சோழ மன்னன் ஆட்சியின் போது இக்கோவில் கட்டப்பட்டது.
முருகனால் பூஜிக்கப்பட்ட சிவன், மலைக்கு அடிவாரத்தில் “கந்தழீஸ்வரர்” என்ற பெயரில் அருளுகிறார். கந்தனால் வழிபடப்பட்டவர் என்பதால் இவருக்கு இப்பெயர் வந்தது. இங்கு சுப்பிரமணியருக்கு அபிஷேகம் செய்த விபூதியையே பிரசாதமாகத் தருகின்றனர்.
அன்னதானம்: ஒருமுறை நாங்கள் அதிகாலையிலேயே தரிசனம் செய்துவிட்டு, மதியம் அன்னதானம் வரை அங்கேயே தங்கியிருந்தோம். இங்கு தினமும் பல பக்தர்கள் 100 முதல் 200 பேருக்கு அன்னதானம் வழங்குகிறார்கள். நீங்களும் அன்னதானம் வழங்க விரும்பினால், கோவில் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு விவரங்களைக் கேட்டுக்கொள்ளலாம்.
நூலகம்: கோவில் வளாகத்தில் ஒரு சிறந்த நூலகம் உள்ளது. முருகப் பெருமானைப் பற்றிய புத்தகங்கள் மற்றும் ஆன்மீக நூல்களைப் படிக்க விரும்புவோர் இந்த நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கந்தசஷ்டி: இங்கு கந்தசஷ்டி விழா எட்டு நாட்கள் விமரிசையாக நடக்கிறது. சூரசம்ஹாரம், வள்ளி திருமணம் மற்றும் தெய்வானை திருமணம் ஆகியவை மிகச் சிறப்பாக நடைபெறும்.
சேக்கிழார்: பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் பெருமான் அவதரித்த ஊர் இதுவே. அவருக்கு மலையடிவாரத்தில் தனிக்கோவில் உள்ளது.
பிரார்த்தனை: திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வந்து வேண்டிக்கொண்டால் விரைவில் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. முருகனுக்குத் திருக்கல்யாணம் செய்தும், அபிஷேகம் செய்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

குன்றத்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் காலை 06:30 மணி முதல் 12:30 மணி வரை, மாலை 04:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 01:00 மணி வரை திறந்திருக்கும். கிருத்திகை நாட்களில் காலை 06:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை திறந்திருக்கும்.
அமைவிடம்: சென்னை தாம்பரத்திலிருந்து 16 கி.மீ., பல்லாவரத்தில் இருந்து 8 கி.மீ. தூரத்தில் குன்றத்தூர் உள்ளது.
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்,
குன்றத்தூர், சென்னை – 600069.
தொலைபேசி: +914424780436, 9382889430