- செப்டம்பர் 25, 2025
Last updated on செப்டம்பர் 23, 2025
கந்த சஷ்டி விரதம் என்பது சிவபெருமானின் மகனும், பார்வதி தேவியின் செல்லக் குமாரனுமான முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முக்கிய விரதமாகும். இந்த புனிதமான விரதத்தை லட்சக்கணக்கான பக்தர்கள், குறிப்பாக தமிழ்நாட்டில், முருகப்பெருமானின் அருளைப் பெற கடைபிடிக்கின்றனர். இந்த விரதங்களில் மிகவும் முக்கியமானது ஐப்பசி மாதத்தில் ஆறு நாட்கள் கடைபிடிக்கப்படும் விரதமாகும். இது சூரசம்காரம் தினத்தில் முடிவடைகிறது. இந்த நாள், முருகப்பெருமான் சூரபத்மனை வென்றதைக் கொண்டாடுகிறது.
சட்டியில் இருந்தால் ஆப்பையில் வரும் என்பது பழமொழி. இது தவறானது. சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது தான் உண்மையான பழமொழி.
அதாவது, சஷ்டி விரதம் இருந்தால் திருமணம் முடிந்து குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் பெண்ணின் அகப்பையாகிய கருப்பையில் குழந்தை வளரும் என்பது அதன் பொருள்.
குழந்தைப்பேறு இல்லாதவர்கள் மட்டுமே சஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும் எனக்கூறுவது தவறு. சஷ்டி விரத நாட்களில் சிரத்தையாக இருந்து விரதம் மேற்கொள்பவர்கள் யாராக இருந்தாலும் அனைத்து சிறப்பையும் பெற முடியும்.
2025 ஆம் ஆண்டின் மகா கந்த சஷ்டி விரத நாட்கள்: கந்த சஷ்டி விரதம் ஆரம்பம் (அக்டோபர் 22), சூரசம்ஹாரம் (அக்டோபர் 27).
ஒவ்வொரு மாதத்திலும் சுக்கில பட்சத்தில் வரும் பிரதமை தொடங்கி சஷ்டி வரை 6 நாட்கள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும். சஷ்டி திதியில் ஒரு நாள் விரதம் இருப்பது கூட மிகவும் நல்ல பலன்களைத் தரும். ஒவ்வொரு நாளும் அதிகாலை எழுந்து, குளித்து முருகனை மனம் உருக வணங்க வேண்டும்.
பூரண கும்பத்தில் தண்ணீர் நிரப்பி மாவிலை வைத்து, தருப்பையை வரிசையாக வைத்து சந்தனமும், அட்சதையும் இட்டு முருகனை அதில் ஆவாகனம் செய்து மலரிட்டு தீபம் காட்டி வழிபடுவது நல்லது.
விரத நாட்களில் அசைவ உணவுகள், வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை பக்தர்கள் தவிர்க்க வேண்டும். பலர் முழுமையாக விரதம் இருப்பார்கள், தண்ணீர், பால் அல்லது பழங்களை மட்டுமே உண்பார்கள். முழுமையாக விரதம் இருக்க முடியாதவர்கள், ஒரு வேளை சைவ உணவை எடுத்துக்கொள்ளலாம்.
சஷ்டி விரத நாட்களில் பகலில் தூங்குதல் கூடாது. சஷ்டி தினத்தன்று இரவிலும் விழித்து இருப்பது கூடுதல் பலன்களை தரும். முருகனை ஆறு காலமும் பூஜை செய்ய வேண்டும்.
6 நாட்களும் கந்தனின் சரித்திரங்களையும், சிறப்புகளையும், திருவிளையாடல்களையும், முருகன் செய்த அற்புதங்களையும் கேட்க வேண்டும்.
திருப்புகழ் பாராயணம் செய்ய வேண்டும். எந்த அளவுக்கு பாராயணம் செய்கிறோமோ அந்த அளவுக்கு முருகனை நெருங்க முடியும். காலையிலும் மாலையிலும் கந்த சஷ்டி கவசம் படிப்பதன் மூலம் எல்லா கஷ்டங்களிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கும்.
சஷ்டி விரதம் இருப்பவர்களது வினைகள் வெந்து சாம்பலாகி விடும். விரதத்தை கடைபிடிக்க பக்தர்களுக்கு எண்ணிய நலமும், புண்ணிய பலமும் கிடைக்கும்.
கந்த சஷ்டி விரதத்தை அர்ப்பணிப்புடனும் நம்பிக்கையுடனும் கடைபிடிப்பது, உங்கள் வாழ்க்கையில் பெரும் ஆன்மீக வளர்ச்சியையும் அருளையும் தரும். இது காலத்தால் அழியாத ஒரு பாரம்பரியம்.