- ஜூன் 1, 2025
சிவஸ்தலம் பெயர் | வடாரண்யேஸ்வரர் திருக்கோவில், திருவாலங்காடு |
---|---|
மூலவர் | வடாரண்யேஸ்வரர், தேவர்சிங்கப்பெருமான், ஊர்த்துவ தாண்டவர் |
அம்மன்/தாயார் | வண்டார்குழலி, பிரம்மராளகாம்பாள் |
தல விருட்சம் | பலா, ஆலமரம் |
தீர்த்தம் | முத்தி |
ஊர் | திருவாலங்காடு |
மாவட்டம் | திருவள்ளூர் |
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
தமிழ் நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு என்னும் இடத்தில் உள்ள வடாரண்யேஸ்வர் கோவில். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் தொண்டைநாட்டு தலங்களில் ஒன்றானது. திருவாலங்காடு என்பது ஆலமரம் நிறைந்த காடு என்று பொருள்.
வடாரண்யேஸ்வர் பொருள்:
வடம் என்றால் ஆலமரம்,
ஆரண்யம் என்றால் காடு,
ஈஸ்வரன் எனறால் சிவபெருமான்.
ஆலமரக்காட்டில் சுயம்புலிங்கமாக தோன்றிய சிவன். இறைவன்: வடாரண்யேஸ்வர், இறைவி: வண்டார்குழலி (கருங்கூந்தல்) உடையவள் என்று பொருள்.
புராணங்களில் படி சும்பன், நிசும்பன் என்ற அரக்கர்களை அடக்க சிவபிரான், காளி தேவியை அனுப்ப, காளி அரக்கர்களை போராடி அழிக்கிறார். அப்போது அந்த இரத்தம் காளி தேவியின் உடம்பில் தெளிக்க காளி உக்கிரமாக மாறுகிறார். காளியை அடக்க சிவபெருமான் காளியுடன் தாண்டவம் ஆடி, வெற்றி பெறுபவர்கள் ஆலங்காட்டில் வசிக்க முடிவெடுக்கிறார். ஆடலரசன் ரத்தினசபையில் ஊர்த்துவ நடனம் ஆடுகிறார். சிவபெருமானின் பஞ்சபூத தலங்கள் போல ஐந்து நடன சபைகள் உண்டு. அதில் முதன்மையானது, திருவாலங்காடு ரத்ன சபை… ஊர்த்துவ நடனம்.
சிதம்பரம் ..பொற் சபை, ஆனந்த நடனம்.
மதுரை..வெள்ளி சபை, சந்தியா நடனம்.
நெல்லை..தாமிர சபை, முனி தாண்டவம்.
திருகுற்றாலம் சித்திரசபை.. திரிபுரா நடனம்.
ஊர்த்துவ என்றால் மேலே என்று பொருள். சிவபிரான் தனது இடது காதின் அணிகலனை கீழே போட்டு இடது கால் பெரு விரலால் அதை எடுத்து காதில் அணிகிறார். காலை மேலே தூக்கி ஆடியதால் ஊர்த்துவ நடனம். காளிதேவி காலை தூக்க முடியாமல் தோல்வி அடைகிறார். ஆனால் சிவபெருமான் காளியின் நாட்டியத்தை புகழ்ந்து அவருக்கு அங்கேயே ஓர் ஆலயத்தை கொடுத்தார். பக்தர்கள் முதலில் காளிதேவியை பிரார்த்தித்தப் பிறகுதான் சிவனை பிரார்த்திக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இக்கோவில் 6 வாயில் கடந்து உள் பிரகாரத்தில் கன்னிமுலையில் கணபதியும், வட மேற்கு முனையில் அருணகிரிநாதரால் பாடப்பெற்ற வள்ளி தெய்வானை கூடிய முருகப் பெருமானும், வட மேற்கில் மாந்தீஸ்வரனும் உள்ளார்கள். சனி பகவானின் மகன் மாந்தி வழிப்பட்டு தோஷம் நீங்கியதால் இங்கே மக்கள் சனிக் கிழமை தோஷ பரிகாரம் செய்கிறார்கள். மக்கள் மிகவும் பக்தியுடனும் நம்பிக்கையுடனும் பரிகாரம் செய்வதைக் காணமுடிந்தது. தெற்கு நோக்கி அம்பாள் வண்டார் குழலி சன்னதி உள்ளது.
இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு காரைக்கால் அம்மையார் இங்கு வந்து இறைவனை அடைந்தார். சிவபிரானின் ஆடலைக் காண திருவாலங்காடு அடைய, “தன் தலையால் நடந்து வந்து சிவனிடம், இறைவா, நான் பாட நீ ஆட, நான் உன் காலடியில் சிவ ஆனந்த வெள்ளத்தில் திளைக்க வேண்டும்” என வேண்ட சிவனும் அருள் புரிந்தார். ரத்தின சபையில் சிவ தாண்டவத்தை பார்க்க காரைக்கால் அம்மையார் ஒருபுறமும், பார்வதி தேவி ஒருபுறமும் உள்ளனர்.
பார்வதி தேவிக்கு “சமி சீனாம்பிகை” என்ற பெயரும் உண்டு. “சமி ” என்றால் அருகில், சமீபத்தில் என்று பொருள், “சீனாப்பிகை ” என்றால் ஆச்சரியப்படுவது என்று பொருள். அம்பாளின் வலதுகை தொங்கவிட்டு இடது கை ஆச்சரியத்தில் முகத்தில் இருப்பது போன்ற அமைப்பு. நாட்டியத்தை அருகில் நின்று கண்ட பிரமிப்பு.
ஒருமுறை திருஞானசம்பந்தர் பக்தர்களுடன் இறைவனை காண ஆசைப்பட்டார். ஆனால் அவர் பழையனூர் எனும் இடத்திலேயே தங்கிவிட்டார். இறைவனை நினைத்து உறங்கி விட்டார். அப்போது யாரோ அவரை தொட்டதை உணர்ந்தார். எவரும் இல்லாதது கண்டு மீண்டும் உறங்கிவிட்டார். மீண்டும் யாரோ அழைக்க எழுந்தபோது தொலைவில் ஒரு உருவம், அலைந்து நெளிந்த சடைமுடி ஆட, சுருண்ட கருத்த பாம்பு கழுத்தில் நெளிய, உடுக்கை பிடித்த கை அசைய குஞ்சிய பாதம் ஆட அழகோடு ஈசன் நிற்க, ஞானசம்பந்தரைப் பார்த்து, பாட மறந்தாயா? என ஈசன் கேட்க, மெய் மறந்த சம்பந்தர் தேவார பாடல்கள் பாடினார். சுந்தரர் அப்பர், சம்பந்தர் பல பாடல்களை பாடினார்கள்..
வண்டார்குழலி உமை நங்கை பங்காகங்கை மணவாளா
விண்டார் புரங்கள் எரி செய்த விடையாய் வேத நெறியானே
பண்டாழ் வினைகள் பல தீர்க்கும் பரமா பழையூர் மேலை
அன்னா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவனே!
இக்கோவிலில் சிற்பக்கலை அழகுடன் பல கல் தூண்கள் அமையப் பெற்றுள்ளது. ரத்தின சபை ஊர்த்துவ நடனக்காட்சியும், பெரிய ஸ்படிபலிங்கம், மரகதலிங்கம் ஆகியவை உள்ளது.
மார்கழி திருவாதிரை இங்கு மிக சிறப்பு. இது தவிர சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் இங்கு கொண்டாடப்படுகிறது.
பிரார்த்தனை: இது தம்பதிகளின் ஒற்றுமையை மேம்படுத்தும் ஸ்தலமாகவும் கருதப்படுகிறது. மேலும் நாட்டியம் பயிலும் மாணவர்கள் விரும்பும் ஆலயமாக உள்ளது. மன நிறைவு கொடுக்கும் ஆலயம்.
நேர்த்திக்கடன்: மார்கழி திருவாதிரையில் சிவனுக்கு அபிஷேக ஆராதனை செய்தல்.
வடாரண்யேஸ்வரர் கோவில் திறக்கும் நேரம்: திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோவில் காலை 06:00 மணி முதல் இரவு 08:00 மணி வரையிலும் தொடர்ந்து தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
சென்னை – அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது. ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ வசதிகள் உண்டு. திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்லும் பேருந்தில் சென்று திருவாலங்காடு நிறுத்தத்தில் இறங்கினால் கோவில் மிக அருகிலேயே இருக்கிறது. திருவள்ளூரில் இருந்து 18 கி.மீ. தொலைவிலும், அரக்கோணத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவிலும் திருவாலங்காடு தலம் உள்ளது.
Vadaranyeswarar Temple Thiruvalangadu Contact Number: +91-4427872074, 9940736579, 9952230906
அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோவில்,
திருவாலங்காடு அஞ்சல்,
அரக்கோணம் அருகில்,
திருத்தணி வட்டம்,
திருவள்ளூர் மாவட்டம்,
PIN – 631203.
எழுதியவர்: உமா