×
Saturday 26th of July 2025

திருத்தளிநாதர் கோவில் திருப்பத்தூர்


Last updated on ஜூன் 2, 2025

thiruthalinathar temple entrance

Thiruthalinathar Temple History in Tamil

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

புராண பெயர் புத்தூர், திருப்புத்தூர்
இறைவன் பெயர் திருத்தளிநாதர்
அம்மன் பெயர் சிவகாமி, சௌந்தர்ய நாயகி
உற்சவர் சோமாஸ்கந்தர்
தல விருட்சம் கொன்றை
தீர்த்தம் ஸ்ரீதளி தீர்த்தம், சிவகங்கை
ஆகமம்/பூஜை சிவாகமம்
ஊர் திருப்புத்தூர்
மாவட்டம் சிவகங்கை

திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் வரலாறு

🛕 எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன், தலம் தோறும் எழுந்தருளி, தம்மை நாடி வருவோருக்கு அருள்பாலித்து வருகிறான். அத்தகைய அருள் சுரக்கும் ஆலயங்களில் ஒன்றுதான் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள ஸ்ரீ திருத்தளிநாதர் ஆலயம். திருத்தளிநாதர் இங்கு எழுந்தருள முக்கியக் காரணம் ஸ்ரீ மகாலட்சுமி ஆவார்.

🛕 ஈசனாகிய இறைவன் பல்வேறு தாண்டவங்களை நிகழ்த்தினான். அவற்றில் கௌரி தாண்டவமும் ஒன்று. அதனைக் காண விரும்பிய ஸ்ரீ மகாலட்சுமி இறைவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். அவருக்கு இறைவன் காட்சி தந்து, கௌரி தாண்டவம் ஆடிக்காட்டிய இடமே இவ்வாலயமாகும். அதனால் தான் திரு (மகாலட்சுமி) வழிபட்ட ஆலயம் என்னும் பொருள் தரும்படியாக இவ்வாலயம் ‘திருத்தளிநாதர்‘ ஆலயம் என்று அழைக்கப்படுவதாகத் தலபுராணம் கூறுகின்றது. மேலும் வான்மீகி மகரிஷி இங்கு வந்து புற்று வடிவில் தவம் செய்து வழிபட்டதாகவும், அதனாலேயே இத்திருத்தலத்திற்கு “திருப்புத்தூர்” என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகின்றது.

thiruthalinathar

Tirupattur Yoga Bhairavar Temple

பைரவர் சந்நிதி: இத்தலத்திலுள்ள பைரவர் சன்னதி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். திருப்பத்தூர் திருத்தளிநாதர் திருக்கோவில் ஆலய பைரவர் பெயரில் வைரவன் கோவில் என்றே இந்த ஆலயம் அழைக்கப்படுகிறது. இவ்வாலயத்தின் 2-வது பிரகாரத்தில் மேற்கு நோக்கிய தனி சந்நிதியில் ஸ்ரீயோகபைரவர் தரிசனம் தருகிறார். குழந்தை வடிவில், வலக்கரத்தில் பழம், இடக்கரம் தொடையின் மீது வைத்துக்கொண்டு கோரைப் பற்களுடன் காட்சி தருகிறார்.

tirupattur yoga bhairavar

🛕 உலகில் தோன்றிய முதல் பைரவ மூர்த்தம் இதுதான் என இவ்வாலயக் குறிப்பு கூறுகின்றது. இங்குள்ள பைரவர் “ஆதி பைரவர்” என்றே அழைக்கப்படுகின்றார். பொதுவாக பைரவர் கையில் சூலத்துடனும், நாய் வாகனத்துடனும், நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிப்பதே மரபு. ஆனால் இங்குள்ள பைரவர் அமர்ந்த நிலையில், யோக நிஷ்டையில் காணப்படுகின்றார். அதனால் “யோக பைரவர்” என்று அழைக்கப்படுகின்றார். இந்திரன் மகன் ஜெயந்தனைக் காப்பதற்காக இவர் திரு அவதாரம் செய்ததாகக் கோவில் குறிப்பு கூறுகின்றது. இந்திரன் மகன் ஜெயந்தன் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுப் பேறடைந்தான். ஆதலின் அவன் உருவம் சந்நிதிக்கு வெளியில் வாயிலில் உள்ளது. சஷ்டி, அஷ்டமி நாட்களில் பைரவருக்கு சிறப்பு ஆராதனை, அபிஷேகம், வழிபாடு, யாகங்கள் செய்யப்படுகின்றன.

🛕 பைரவருக்குப் புனுகு சார்த்தப்பட்டு, வடைமாலை அணிவிக்கப் பெற்று, அவருக்கு மிகவும் உகந்ததான சம்பா சாதம் தினம் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இவரது வழிபாட்டில் கலந்து கொண்டாலோ அல்லது இங்கு வந்து நியமத்தோடு வேண்டிக் கொண்டாலோ சத்ரு பயம், ஏவல், பில்லி, சூனியம் போன்ற தொல்லைகள், வியாபாரக் கஷ்ட நஷ்டங்கள், வேலை பற்றிய பிரச்னைகள் நீங்குவதாக நம்பிக்கை.

🛕 அர்த்தசாம வழிபாட்டிற்காக பூஜை மணியடித்து விட்டால் குருக்கள், பரிசாரகர், நைவேத்தியம் கொண்டு செல்வோர் ஆகிய மூவர் தவிர அதன் பின் யாரும் பைரவர் இருக்கும் பகுதிக்குச் செல்லக் கூடாது என்பது தொன்றுதொட்டுக் கடைப்பிடிக்கப்படும் ஐதீகம். பைரவர் அவ்வளவு உக்ரமானவராகக் கருதப்படுகிறார். உக்ரத்தைத் தணிக்க பைரவரைச் சங்கிலியால் பிணைத்து வைத்தலும் உண்டு.

🛕 யோக பைரவர் சந்நிதியை அடுத்து பிராகாரம் வலம் வரும்போது நாகேஸ்வரர் சந்நிதியும் உள்ளது. பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இத்திருத்தலத்தில் சரஸ்வதியும், மகாலட்சுமியும் பூஜித்து அருள் பெற்றிருக்கிறார்கள். இந்திரனின் மகன் ஜயந்தன் இங்கு வந்து இறைவனை வழிபட்டிருக்கிறான். இங்குள்ள ஸ்ரீ மகாலட்சுமியை வணங்குபவர்களுக்கு வளமும், நலமும் கிட்டும் என்பது நம்பிக்கையாகும்.

🛕 இத்திருத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம் ஸ்ரீ யோக நாராயணர் சந்நிதி. யோக நரசிம்மரை நாம் அறிவோம். யோக ஆஞ்சனேயரையும் அறிவோம். ஏன் யோக தட்சிணாமூர்த்தியையும் அறிவோம். ஆனால் ஸ்ரீமன் நாராயணனே யோக நிலையில் வீற்றிருப்பது இத்திருத்தலத்தின் சிறப்பம்சமாகும். கோவிலுள் உள்ள நடராஐரின் உருவமும் சிவகாமி அம்மையின் அழகும் கண்டு இன்புறத்தக்கன. இங்கு நடராஐர் கெளரி தாண்டவ மூர்த்தியாகக் காட்சி தருவது தனிச்சிறப்பாகும்.

🛕 அழகான சிற்ப வேலைப்பாடு அமைந்த ஐந்து இசைத் தூண்களும் இங்குள்ளன. துர்க்கையும் தனிச் சன்னதியில் வீற்றிருக்கின்றாள். ஸ்ரீ விநாயகரும் வன்னி மரத்து விநாயகராக எழுந்தருளியிருக்கிறார். இங்கு யோக பைரவர், யோக நாராயணர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளதால் யோகத்துக்கும் தவத்துக்கும் இதுவோர் அற்புதமான திருத்தலமாக விளங்குகின்றது. இத்தலத்திலும் பிரான்மலையில் உள்ளது போலவே நவக்கிரகங்கள் அமர்ந்த நிலையில் உள்ளன.

thiruthalinathar temple vanni mara vinayagar

திருப்புகழ் தலம்

🛕 இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 2 பாடல்கள் உள்ளன. இத்தலத்தில் முருகப்பெருமான் 2-ம் பிரகாரத்தில் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு மயிலின் முன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார்.

🛕 பாண்டிய மன்னர்கள் பலரும் இத்தலத்திற்குத் திருப்பணி செய்துள்ளனர். மருதுபாண்டியர்களால் ஆராதிக்கப் பெற்ற தலம். பல்வேறு கல்வெட்டுக்களும் காணக் கிடைக்கின்றன. இத்தலத்தின் தலவிருட்சம் கொன்றை. தீர்த்தங்கள் திருத்தளி தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 196 வது தேவாரத்தலம் ஆகும். சித்திரையில் பைரவர் விழா, கார்த்திகையில் சம்பக சஷ்டி.

பிரார்த்தனை: குடும்பம் செழிக்க, செய்த பாவத்திற்கு மன்னிப்பு கிடைக்க இங்கு வேண்டிக்கொள்ளலாம்.

நேர்த்திக்கடன்: சுவாமிக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து விசேஷ பூஜை செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

Thiruthalinathar Temple Timings

🛕 காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

tirupattur thiruthalinathar temple

Thiruthalinathar Temple Address

🛕 திருத்தளிநாதர் கோவில் காரைக்குடியில் இருந்து கிழக்கே சுமார் 20 கி.மி. தொலைவிலும், சிவகங்கையில் இருந்து சுமார் 35 கி.மி. தொலைவிலும், மதுரையில் இருந்து சுமார் 65 கி.மி. தொலைவிலும் அமைந்துள்ளது. பேருந்து வசதிகள் மதுரை, காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களில் இருந்து திருப்புத்தூருக்கு உண்டு. அருகில் உள்ள ரயில் நிலையம் காரைக்குடி.

அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோவில்,
திருப்புத்தூர் அஞ்சல்,
சிவகங்கை மாவட்டம்,
PIN – 623211.

 

 


 

இதைப் பதிவேற்றியவர்..

Dineshgandhi

நான் தினேஷ், Aanmeegam.org வலைத்தளத்தின் நிறுவனர். 2018 ஆம் ஆண்டு Blogger மூலம் ஆரம்பித்து 2020 இல் WordPress-க்கு மாறினேன். ACCET, காரைக்குடியில் MCA முடித்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த SEO நிபுணராகவும், ஆன்மிக பதிவாளராகவும் செயல்படுகிறேன்.

Read full bio →


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

thimiri-kumaragiri-murugan-temple-entrance
  • ஜூலை 21, 2025
குமரகிரி முருகன் கோவில், திமிரி: ஒரு சக்தி வாய்ந்த மலைக்கோவில்
nitya-kalyana-perumal-temple-tiruvidandhai
  • ஜூலை 12, 2025
அருள்மிகு நித்ய கல்யாணப் பெருமாள் கோவில், திருவிடந்தை
kolampakkam-agastheeshwarar-temple-entrance
  • ஜூன் 26, 2025
அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், கொளப்பாக்கம்