×
Saturday 26th of July 2025

ஆரண்ய சுந்தரேஸ்வரர் திருக்கோவில்


Last updated on ஏப்ரல் 25, 2025

aranya sundareswarar temple history tamil

Aaranya Sundareswarar Temple History in Tamil

ஆரண்ய சுந்தரேஸ்வரர் திருக்கோவில்

🛕 சோழ பெருவள நாட்டின் காவிரியின் வடகரை திருத்தலங்களில் 12-வது தலம் கீழை திருக்காட்டுப்பள்ளி. இத்தலத்திற்கு ‘ஆரண்யஸ்வரம்’ என்ற பெயரும் உண்டு. இங்குள்ளது ஆரண்ய சுந்தரேஸ்வரர் திருக்கோவில். இறைவனின் திருநாமம் ஆரண்ய சுந்தரேஸ்வரர். இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி என்பதாகும். இறைவியின் இன்னொரு பெயர் அகிலாண்டநாயகி.

🛕 ஆலயம் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பை தாண்டி உள்ளே நுழைந்ததும், நீண்ட பிரகாரம் காணப்படுகிறது. அதன் நடுவே பலிபீடமும், நந்தியும் இருக்க, இடதுபுறம் இரண்டு சிவலிங்கங்கள் உள்ளன. பிரம்மேசர், முனி ஸ்ரீசர் என்ற அந்த இரண்டு சிவ லிங்கங்களை அடுத்து முருகப் பெருமான் சன்னிதி உள்ளது. முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் நின்ற கோலத்தில் இங்கு அருள்பாலிக்கிறார்.

🛕 வடக்கு பிரகாரத்தில் சண்டீஸ்வரர் சன்னிதி உள்ளது. ஆலய தலவிருட்சம் பன்னீர் மரம். கிழக்கு பிரகாரத்தில் பைரவர், சண்டீஸ்வரர், சூரியன் திருமேனிகள் இருக்கின்றன. தெற்கு பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி ஆறு முனிவர்கள் சூழ காட்சி தருகிறார். அவர் அருகே சுவற்றில் மன்னன் ஒருவன் சிவபெருமானை பூஜை செய்யும் கற்சிற்பம் அழகுற வடிக்கப்பட்டுள்ளது.

🛕 மேற்கு திருச்சுற்றில் கற்கட மகா கணபதி உள்ளார். நண்டு பூஜித்தகணபதி இவர். இவரது பீடத்தில் நண்டு உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. கடக ராசிக்காரர்கள் இந்த விநாயகருக்கு, அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால், அவர்களுக்கு ஏற்பட்ட தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

🛕 இந்த விநாயகரை அடுத்து இரட்டை லிங்கம் உள்ளது. இந்த இரண்டு லிங்கங்களும் இணைந்து காணப்படும் அமைப்பு சிறப்பானது. இந்த இரட்டை லிங்கத்தை அபிஷேகம் செய்து ஆராதித்து வழிபட்டால், இழந்த பதவியை மீண்டும் பெறலாம் என்று கூறுகிறார்கள். சுமார் 1000 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், சம்பந்தரால் பாடப்பெற்ற தலம் ஆகும்.

🛕 ஆலய கிழக்கு திருச்சுற்றில் உள்ள பிரம்மேசரை பூஜை செய்து வழிபடுபவர்கள், 100 அசுவ மேத யாகம் செய்த பலனை அடைவார்கள். பிரம்மன் இத்தலத்தில் வியாக்ரபாதேஸ்வரர், கபாலீசர், அகஸ்தியேசர், முனீசர், சுக்ரேஸ்வரர், பிரம்மேஸ்வரர் உள்ளிட்ட பத்து சிவலிங்க திருவுருவங்களை எழுந்தருளிவித்து வழிபட்டார்.

🛕 இது ஆரண்ய முனிவர் வழிபட்ட அருள்பெற்ற தலம். இவர் மகா காளம்மையை தம் பூஜை முடியும் வரை காவலாக இருக்குமாறு கேட்டுக்கொண்டு இறைவனை வழிபட்டார் என தல வரலாறு கூறுகிறது.

🛕 ஆலயம் மகாமண்டபத்தின் இடது புறம் அன்னை அகிலாண்டநாயகி தென்திசை நோக்கி நின்ற கோலத்தில், புன்னகை தவழும் முகத்துடன் அருள்பாலிக்கிறாள். இறைவன் கருவறையில் சதுர பீட ஆவுடையாரின் மேல்திசை நோக்கி வீற்றிருக்கிறார்.

🛕 சிவபெருமான் பலாசவனம் என்றும், மதங்காஸ்ரமம் என்றும் வழங்கப்படும் திருநாங்கூரிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலுமாக 12 பீடங்களில் எழுந்தருளியுள்ளார். இந்த 12 ஆலய இறைவனும், ஏக காலத்தில் வைகாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் ஒன்று சேருவார்கள். இவர்கள் அனைவரும் திருநாங்கூரில் அமைந்துள்ள மதங்கீஸ்வர சுவாமி ஆலயத்தில் ரிஷப வாகனத்தில் திருக்கல்யாண கோலத்தில் திவ்ய தரிசனம் தரும் வைபவம் ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த வைபவத்தில் அகோர பீடம் என அழைக்கப்படும், இத்தல இறைவனும் இறைவியும் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கமான சம்பவமாகும்.

இந்திரனுக்கு மீண்டும் பதவி

🛕 இந்திரன் ஒரு முறை, தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதியை அவமதித்தான். பின்னர் அசுர குலத்தைச் சேர்ந்த விசுவரூபன் என்பவனை, தேவர்களின் குருவாகக் கொண்டு ஒரு வேள்வியைச் செய்தான். ஆனால் விசுவரூபன் தேவர்கள் அழியுமாறு வேள்ளி செய்தான். இதையறிந்து அவனை இந்திரன் கொன்றான்.

🛕 விசுவரூபனின் தந்தையான துவாட்டா என்பவர், தனது மகனின் இறப்பை அறிந்து வேதனை கொண்டார். இந்திரனை அழிக்க ஒரு வேள்வி நடத்தினார். அதில் இருந்து விருத்திராசூரன் என்பவர் தோன்றி தேவர்களை துன்புறுத்தினான். அவனை அழிக்க புதியதொரு ஆயுதம் தேவைப்பட்டது. எனவே ததீசி என்ற முனிவரின் முதுகு தண்டுவடத்தில் ஆயுதம் செய்யப்பட்டது. அதுவே வஜ்ராயுதம். அதைக் கொண்டு விருத்திராசூரனை அழித்தான் இந்திரன்.

🛕 வேள்வியில் தோன்றிய விருத்திராசூரனை அழித்ததால் இந்திரனுக்கு தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷம் நீங்குவதற்காக பல்வேறு தலங்களுக்குச் சென்று ஈசனை வழிபட்டான். பின்னர் திருவெண்காடு, கீழை திருக்காட்டுப்பள்ளி இறைவனை வணங்கி தோஷம் நீங்கப்பெற்று, மீண்டும் தேவலோக ஆட்சியை கைப்பற்றினான்.

Aaranya Sundareswarar Temple Timings

🛕 இந்த ஆலயம் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

Aaranya Sundareswarar Temple Location

🛕 நாகை மாவட்டம் திருவெண்காடு சிவாலய மேற்கு கோபுர வாசலில் இருந்து, மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கீழை திருக்காட்டுப்பள்ளி என்ற இந்த தலம். புதன் தலமான திருவெண்காடு செல்பவர்கள் அருகே உள்ள இந்தத் தலத்தையும் தரிசிக்கலாம்.


 

இதைப் பதிவேற்றியவர்..

Dineshgandhi

நான் தினேஷ், Aanmeegam.org வலைத்தளத்தின் நிறுவனர். 2018 ஆம் ஆண்டு Blogger மூலம் ஆரம்பித்து 2020 இல் WordPress-க்கு மாறினேன். ACCET, காரைக்குடியில் MCA முடித்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த SEO நிபுணராகவும், ஆன்மிக பதிவாளராகவும் செயல்படுகிறேன்.

Read full bio →


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

thimiri-kumaragiri-murugan-temple-entrance
  • ஜூலை 21, 2025
குமரகிரி முருகன் கோவில், திமிரி: ஒரு சக்தி வாய்ந்த மலைக்கோவில்
nitya-kalyana-perumal-temple-tiruvidandhai
  • ஜூலை 12, 2025
அருள்மிகு நித்ய கல்யாணப் பெருமாள் கோவில், திருவிடந்தை
kolampakkam-agastheeshwarar-temple-entrance
  • ஜூன் 26, 2025
அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், கொளப்பாக்கம்