- ஜூலை 2, 2025
ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய பஞ்ச ரத்ன ஸ்தோத்திரத்தை தினமும் பாராயணம் செய்வதன் மூலம், நீங்கள் விரும்பிய அனைத்துப் பொருட்களும் கிடைக்கும். புத்திர பாக்கியம், ஆரோக்கியம், செல்வம், சௌபாக்கியம், வித்யா லாபம் (கல்வி), உத்யோக லாபம் (வேலை), வியாபார லாபம் என அனைத்து விதமான நன்மைகளும் கிட்டும் என்பது உறுதி.
ஸ்ருதிஸதநுதரத்னம்
ஸ்ருதிஸதநுதரத்னம் ஸூத்தஸத்வைகரத்னம்
யதிஹித கர ரத்னம் யக்ஞ ஸம்பாவ்யரத்னம்
திதிஸூதரிபுரத்னம் தேவஸேநேஸரத்னம்
ஜிதரதிபதிரத்னம் சிந்தயேத் ஸ்கந்தரத்னம்
பொருள்: நூற்றுக்கணக்கான வேதங்களால் போற்றப்பட்டு இரத்தினம் போல் விளங்குபவரும், தூய்மையான சத்துவ குணத்தை இரத்தினம் போல் கொண்டவரும், துறவிகளுக்கு நன்மையைச் செய்யும் இரத்தினமும், யாகங்களில் போற்றப்படும் இரத்தினமும், அசுரர்களின் பகைவனான இரத்தினமும், தேவஸேனையின் கணவனான இரத்தினமும், மன்மதனை வென்ற அழகுத் திருமேனியன் ஆன இரத்தினமுமான ஸ்ரீ ஸ்கந்தனை தியானம் செய்ய வேண்டும்.
ஸூரமுகபதிரத்னம்
ஸூரமுகபதிரத்னம் ஸூக்ஷ்மபோதைகரத்னம்
பரம்ஸூகதரத்னம் பார்வதீஸூநுரத்னம்
ஸரவணபவரத்னம் ஸத்ருஸம்ஹார ரத்னம்
ஸ்மரஹஸூத ரத்னம் சிந்தயேத் ஸ்கந்த ரத்னம்
பொருள்: தேவ சைன்யங்களுக்குத் தலைவனான இரத்தினமும், சூட்சும ஞானமே உருவான இரத்தினமும், பேரின்பத்தை அளிக்கும் இரத்தினமும், பார்வதியின் புதல்வனான இரத்தினமும், நாணற்காட்டில் பிறந்த இரத்தினமும், சத்ருக்களை அழிக்கும் இரத்தினமும், மன்மதனை சாம்பலாக்கிய ஸ்ரீ பரமேஸ்வரனின் குழந்தையாகிய இரத்தினமுமான ஸ்கந்தனை தியானம் செய்ய வேண்டும்.
நிதிபதிஹித ரத்னம்
நிதிபதிஹித ரத்னம் நிஸ்சிதாத்வைத ரத்னம்
மதுரசரித ரத்னம் மாநிதாங்க்ரி அப்ஜ ரத்னம்
விதுஸதநிப ரத்னம் விஸ்வ ஸந்த்ராண ரத்னம்
புதமுநி குரு ரத்னம் சிந்தயேத் ஸ்கந்த ரத்னம்
பொருள்: குபேரனுக்கு நன்மையைச் செய்யும் இரத்தினமும், அத்வைத நிலையை உறுதிப்படுத்தும் இரத்தினமும், இனிமையான சரித்திரத்தை உடைய இரத்தினமும், பூஜிக்கப்பட்ட தாமரைத் திருவடிகளை உடைய இரத்தினமும், நூறு சந்திரர்களுக்கு ஒத்த காந்தியுடைய இரத்தினமும், உலகத்தைப் பாதுகாக்கும் இரத்தினமும், ஞானிகளுக்கும் முனிவர்களுக்கும் குருவான இரத்தினமுமான ஸ்ரீஸ்கந்தனை தியானம் செய்ய வேண்டும்.
அபயவரத ரத்னம்
அபயவரத ரத்னம் சாப்த ஸந்தான ரத்னம்
இபமுகயுத ரத்னம் ஈஸ ஸக்த்யைக ரத்னம்
ஸுபகரமுக ரத்னம் ஸூரஸம்ஹார ரத்னம்
உபயகதித ரத்னம் சிந்தயேத் ஸ்கந்த ரத்னம்
பொருள்: அபயத்தையும் வரங்களையும் அருளும் இரத்தினமும், நற் சந்தானத்தை அளிக்கும் இரத்தினமும், யானை முகத்தோனான ஸ்ரீ கணபதியுடன் கூடியிருக்கும் இரத்தினமும், ஸ்ரீ பரமேஸ்வரனின் ஒரே சக்தியான இரத்தினமும், மங்களத்தைத் தரும் திருமுகங்கள் மற்றும் திருக்கரங்களை உடைய இரத்தினமும், சூரபத்மனை சம்ஹரித்த இரத்தினமும், இம்மையிலும் மறுமையிலும் நன்மையை அளிக்கும் இரத்தினமுமான ஸ்ரீஸ்கந்தனை தியானம் செய்ய வேண்டும்.
ஸூஜந ஸூலப ரத்னம்
ஸூஜந ஸூலப ரத்னம் ஸ்வர்ண வல்லீஸ ரத்னம்
பஜன ஸூகத ரத்னம் பாநுகோட்யாப ரத்னம்
அஜஸிவ குரு ரத்னம் சாத்புதாகார ரத்னம்
த்விஜகணநுத ரத்னம் சிந்தயேத் ஸ்கந்த ரத்னம்
பொருள்: சாதுக்களுக்கு எளிதில் அருளும் இரத்தினமும், பொன் போன்ற வள்ளி தேவியின் கணவனான இரத்தினமும், தன்னை பூஜிப்பவர்களுக்கு சுகத்தை அளிக்கும் இரத்தினமும், கோடி சூரியனுக்கு ஒப்பான காந்தியுடைய இரத்தினமும், பிரம்ம தேவனுக்கும் ஸ்ரீ பரமேஸ்வரனுக்கும் குருவான இரத்தினமும், ஆச்சரியமான திருவுருவத்தைக் கொண்ட இரத்தினமும், வேதவித்துக்களின் கூட்டங்களால் போற்றப்பட்ட இரத்தினமுமான ஸ்ரீ ஸ்கந்தனை தியானம் செய்ய வேண்டும்.
பலச்ருதி (பலன்கள்)
ஷண்முகஸ்ய ஸகலார்த்த ஸித்திதம்
பஞ்சரத்னமக ப்ருந்த க்ருந்தனம்
யே படந்தி விபவை: ஸ்புடான்விதா:
ஸ்ரீதராக்ய குருமூர்த்ய நுக்ரஹாத்
பொருள்: பாவக் கூட்டங்களை நீக்குவதும், சகல விருப்பங்களையும் சித்தி செய்யக்கூடியதுமான ஆறுமுகப் பெருமானின் இந்த பஞ்சரத்ன ஸ்தோத்திரத்தை எவர்கள் படனம் செய்கிறார்களோ, அவர்கள் திருவிசநல்லூரில் ஜோதிமயமாய் விளங்குகின்ற ஸ்ரீதர அய்யாவாள் என்ற குருமூர்த்தியின் அனுக்ரஹத்தால் சகல ஐஸ்வர்யங்களுடனும் நிச்சயமாக வாழ்வார்கள்.
|| ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய பஞ்சரத்ன ஸ்தோத்ரம் சம்பூர்ணம் ||