×
Sunday 15th of June 2025

சகலகலாவல்லி மாலை


Last updated on மே 29, 2025

sakalakalavalli maalai lyrics with meaning

Kumaraguruparar

🛕 17 ஆம் நூற்றாண்டில் இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீ வைகுண்டம் எனும் ஊரில் பிறந்தவர்தான் குமரகுருபரர். இவர் பிறந்து ஐந்து வயதாகும் வரை பேசும் திறனற்று இருந்தார்; இதனால் வேதனையுற்ற இவரது பெற்றோர் இவரை திருச்செந்தூர் சென்று அங்கு கோவில் கொண்டிருக்கும் செந்திலாண்டவரை வணங்கினர்.

🛕 அவரின் அருளாற்றலால் சில தினத்திலேயே பேச ஆரம்பித்ததோடு மட்டுமில்லாமல், கவித்திறத்துடன் பாடல்களை பாடும் வரத்தையும் பெற்றார் குமரகுருபரர். இவரது திறமையை அறிந்த மதுரையை ஆண்ட நாயக்க மன்னன் தனது அரசவைக்கு அழைத்தார். அதன் பேரில் அங்கு சென்ற குமரகுருபரர் அங்கு சிறந்த தமிழ் பாடலை பாடி அந்த மன்னனால் பரிசுகள் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டார்.
🛕 ஞானத்தேடலில் அதிகம் ஈடுபட்டிருந்த குமரகுருபரர் பாரதம் எங்கும் பயணம் செய்தார். அப்போது அவர் காசி நகருக்கு சென்றிருந்த சமயம் அந்த புனிதமான காசி நகரத்தின் சிவன் கோவிலும், அதன் சம்பிரதாயம் மற்றும் இந்து மதமே முகலாயர்களின் அடக்குமுறையால் மிகவும் ஷீணமடைந்திருந்தது.

🛕 இந்த நிலையை மாற்ற நினைத்த குமரகுருபரர் அந்த முகலாய மன்னனிடம் தாம் பேசி சைவ மதத்தை மீட்க விரும்பினார். ஆனால் அவர்களிடம் பேச அவர்களின் இந்துஸ்தானி மொழி தமக்கு தெரியாததை குறித்து வருந்தினார். உடனே தான் வணங்கும் சரஸ்வதி தேவியை வணங்கி சகலகலாவல்லி மாலை எனும் பாடல் தொகுப்பை பாட அந்த தேவியின் அருளால் வடமொழி பேசும் திறன் பெற்றார்.

Sakalakalavalli Maalai

குமரகுருபர சுவாமிகள் அருளிச் செய்த சகலகலாவல்லி மாலை

வெண்டா மரைக்கன்றி நின்பதந்தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசகமேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித்தாகவுண் டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே. [1]

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள்வாய் பங்கயாசனத்தில்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக்குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே சகலகலாவல்லியே! [2]

அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்து உன் அருட்கடலில்
குளிக்கும் படிக்கு என்று கூடும்கொலோ? உளம்கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக் கண்டு
களிக்கும் கலாப மயிலே! சகலகலாவல்லியே! [3]

தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்வாய்! வடநூல்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே! [4]

பஞ்சு அப்பு இதம் தரும் செய்ய பொற் பாத பங்கேருகம் என்
நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடுந்தாள் கமலத்து
அஞ்சத்துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்தவிசு ஒத்திருந்தாய் சகலகலாவல்லியே! [5]

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிது எய்த நல்காய் எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலாவல்லியே! [6]

பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும் படி நின் கடைக்கண் நல்காய் உளம் கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள் ஓதிமப் பேடே சகலகலாவல்லியே! [7]

சொல்விற்பனமும் அவதானமும் கவி சொல்ல வல்ல
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் நளின ஆசனம் சேர்
செல்விக்கு அரிது என்று ஒரு காலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும் செல்வப் பேறே சகலகலாவல்லியே! [8]

சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம் என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார் நிலம்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை
கற்கும் பதாம்புயத்தாயே சகலகலாவல்லியே! [9]

மண்கொண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே! [10]

Also, read


 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

Karpagavalli Song Lyrics
  • ஜூன் 10, 2025
கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
Rama Raksha Stotram
  • மே 19, 2025
ஸ்ரீ ராம ரக்க்ஷா ஸ்தோத்ரம்
Narayana Suktam
  • மே 14, 2025
நாராயண சூக்தம்