×
Sunday 15th of June 2025

நடராஜர் பற்றிய தகவல்


Last updated on மே 16, 2025

thillai natarajar

Table of Contents

Nataraja Story in Tamil

பகவான் நடராஜர், சிவபெருமானின் ஒரு வடிவம், அவர் பிரபஞ்ச நடனக் கலைஞர். இவரது நடனம், தாண்டவம் என்று அழைக்கப்படுகிறது. அவரது நடனம் பற்றிய விவரங்கள் பல்வேறு புனித நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன, மேலும் பொதுவாக பெரும்பாலான சிவன் கோவில்களில் நடராஜர் சிலை காணப்படும்.

மக்களைக் காக்கவும், பூமியில் அமைதியையும் செழிப்பையும் நிலைநாட்டவும் அவர் நடனமாடுகிறார் என்று நம்பப்படுகிறது. பிரதோஷ நாட்களில் நடராஜர் வடிவில் சிவபெருமான், நந்தி பகவானின் கொம்புகளுக்கு இடையே நடனமாடுவார். ஒருமுறை மகாவிஷ்ணுவின் நாகப் படுக்கையான ஆதிசேஷன் சிவபெருமானை வழிபட்டு, அதனால் சிவபெருமான் மனமகிழ்ந்து, நடராஜர் வடிவில் ஆதிசேஷனுக்குக்  காட்சியளித்தார்.

எல்லோரா குகைகள் மற்றும் பாதாமி குகைகளில் பல்வேறு நடன கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஆசிய நாடுகளில் உள்ள இந்து கோவில்களிலும், நடராஜர் வழிபடப்படுகிறார். சிதம்பரம், மதுரை, திருவாலங்காடு, திருநெல்வேலி, குற்றாலம் கோவில்களில், ஆருத்ரா தரிசனம் என்றழைக்கப்படும் திருவாதிரைத் திருவிழா, வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

சிவபெருமானின் நன்கு அறியப்பட்ட வடிவமான நடராஜர் நடனக் கடவுளாக போற்றப்படுகிறார். நடனக் கலைஞர்கள் மற்றும் கலை சார்ந்தவர்கள் தங்கள் தொழிலில் சிறந்த முடிவுகளைப் பெறுவதற்காக அவரை முக்கியமாக வணங்குகிறார்கள். இசை மற்றும் நாட்டியத் துறையைச் சேர்ந்த பெரும்பாலானோர், தங்கள் வீட்டில் நடராஜர் சிலையை வழிபாட்டிற்காகவும், காட்சிக்காகவும் வைத்திருப்பார்கள். சிதம்பரம் கோவிலின் முக்கிய தெய்வமான நடராஜர், முக்தி தருபவராக நம்பப்படுகிறது.

குள்ள அரக்கனான முயலகனை தனது இடது காலில் அழுத்தி, நம் மனதில் உள்ள அறியாமையைப் போக்கவும், ஆன்மீக இன்பத்தை அளிக்கவும், தன் புனித இருப்பிடமான கைலாயத்தில் இருந்து மகிழ்ச்சியுடன் நடனம் ஆடுவதால் சிவபெருமான் ஆனந்த தாண்டவ மூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். சிவபெருமானும் தனது மகிழ்ச்சியை பூமியிலும், வானத்திலும் உள்ள மற்ற உயிரினங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக மகிழ்ச்சியுடன் நடனமாடுகிறார். அவரது தெய்வீக நடனத்தைக் காண தேவர்களும், நாரதர், தும்புரு, பிருகு போன்ற ரிஷிகளும் வானில் கூடி சிவபெருமானின் நடன நிகழ்ச்சியை மகிழ்ச்சியுடன் கண்டு களிப்பார்கள்.

முயலகன் ஒரு குள்ள அரக்கன், ஒரு காலத்தில் சொர்க்கத்தில் உள்ள தேவர்களுக்கு பல தொல்லைகளை ஏற்படுத்தியவன், இந்த விஷயத்தை தேவர்கள் நேரடியாக சிவபெருமானிடம் தெரிவித்தனர். இறவாமை வரம் பெற்றதால், அவனை யாராலும் கொல்ல முடியாது என்பதால், அவனது அகங்காரத்தையும், தீய குணத்தையும் போக்க, சிவபெருமான், முயலகனை தன் இடத்திற்கு வரவழைத்து, சிறிது காலம் போர் தொடுத்து, அதன் பின், தன் இரு கைகளாலும் தூக்கி, தன் பாதத்தில் கிடத்தினார். அதன் மூலம், நித்திய பேரின்பத்தையும் அவனுக்குத் தந்தார்.

சிவபெருமானின் திருவடியை அடையும் முன், தேவர்களுக்கும், பூலோக மக்களுக்கும் தன் சக்தியால் கொடிய நோய்களை முயலகன் ஏற்படுத்தினான். அதனால், பெரும்பாலான மக்கள் கடுமையான நரம்பியல் நோய்களால் பாதிக்கப்படத் தொடங்கினர், மேலும் அவர்களின் சுயநினைவையும் இழந்தனர். சிவபெருமான் இரக்கமுள்ள தெய்வம் என்பதால், பாதிக்கப்பட்டவர்கள் மீது இரக்கம் கொண்டார், எனவே அவர்களின் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு, முயலகனை தனது புனித பாதத்தில் நிரந்தரமாக அமர வைத்தார்.

நம்மில் பெரும்பாலோர் நம் கஷ்டங்களின் போது கடவுளை விமர்சிப்போம், கடவுளுக்கு எந்த வேலையும் இல்லை, அவர் வெறுமனே தனது இருப்பிடத்திலிருந்து தூங்குகிறார் என்று கூட நாம் சொல்வோம். ஒரு கடவுள் மலையில் (சிவபெருமான்), மற்றொரு கடவுள் பாற்கடலில் (மகாவிஷ்ணு) தூங்குகிறார் என்று கூட சில பக்தர்கள் கூறுவார்கள்.

ஆனால் இந்த இரண்டு கடவுள்களும் உலகளாவிய நன்மைக்காக தியான நித்திரையைச் செய்கிறார்கள் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். இவர்களைப் போலவே ஷீரடி சாய்பாபா, குரு ராகவேந்திர சுவாமி போன்ற மகான்களும் பக்தர்களின் வாழ்வில் இனிமையை சேர்க்கும் வகையில் நிரந்தரமாக தியானம் செய்து வருகின்றனர்.

திருவாதிரைத் திருநாளில் ஏதேனும் ஒரு சிவாலயத்திலோ, அல்லது சிதம்பரத்திலோ, நடராஜப் பெருமானை வழிபட்டால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் உண்டாகும், பாவங்கள் நீங்கி, நம் துன்பங்கள் அனைத்தும் தீரும். பிரதோஷ நாட்களில் நடராஜரை வழிபட்டால் வாழ்வில் நல்ல செழிப்புக் கிடைக்கும். எனவே, புனித நடராஜரை வழிபட்டு பேரருள் பெறுவோம். நடராஜா நீ எப்போதும், என் கூட இருந்திட வேண்டும் தில்லை மஹாராஜா!

“ஓம் ஸ்ரீ சிதம்பரச் சிவாய நமஹ”

எழுதியவர்: ரா.ஹரிசங்கர்


 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

Sai Baba Miracles in Tamil
  • மார்ச் 30, 2025
ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் அற்புதங்கள்
Raghavendra Swamy Brindavana Tirtha Yatra
  • மார்ச் 30, 2025
குரு ராகவேந்திர சுவாமி பிருந்தாவன தீர்த்த யாத்திரை
Lord Rama History in Tamil
  • மார்ச் 30, 2025
ஸ்ரீ ராமபிரான் வாழ்க்கை வரலாறு