- மே 27, 2025
தமிழ்க் கடவுளாக விளங்கும் முருகப்பெருமானோடு தொடர்புடைய நட்சத்திரங்கள் மூன்று. அவை:
விசாக நட்சத்திர தினத்தன்றுதான் முருகன் அவதரித்தார். ஞானமே திரண்டு முருகனாக அவதரித்தது. அதனால் அது ஞானத்திருநாள் ஆனது. கார்த்திகை மாதர்கள் அவருக்குப் பாலூட்டி வளர்த்தனர். அவர்களுக்குச் சிறப்பு அளிக்கும் வகையில் முருகன் கார்த்திகை நட்சத்திரத்துக்குச் சிறப்பளித்தும் அந்நாளைத் தன்னை வழிபடும் நாளாகவும் ஆக்கினார். உத்திர நட்சத்திர நாள் அவர் வள்ளியை மணந்து அருள்புரிந்த திருநாளாகும்.
வைகாசி விசாகத்தில் தோன்றியதால் முருகனுக்கு விசாகன் என்பது பெயரானது. அதனாலேயே விசாகப் பெருமாள் எனவும் அழைத்தனர். மேலும், அவனது தோழர்கள் சாகன், விசாகன் எனப்படுகின்றனர். வைகாசி விசாக நாளில் சிவ பெருமானின் நெற்றிக்கண்ணில் தோன்றிய ஆறு தீப்பொறிகளில் இருந்து ஆறு தனித்தனிக் குழந்தைகளாக மாறிய முருகன் ஒன்று சேர்ந்து ஆறுமுகங்களும், பன்னிரண்டு தோள்களும் கொண்ட அழகனாக உருப்பெற்றான்.
அவனை ஆறு கார்த்திகைப் பெண்களும் அன்று வழிபட்டுப் பேறு பெற்றனர். ஞானக் கொழுந்தாக நின்ற பெருமான் அவ்வேளையில் சரவணப் பொய்கையில் மீனாக வசித்து வந்த பராசரர்களின் குமாரர்களுக்கு ஞானத்தை வழங்கினான். முருகன் ஞானம் வழங்கிய முதன் முதல் நாளாக அது அமைந்தது. இதையொட்டி முருகன் ஆலயங்களில் ஆறுமுக சுவாமிக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன; ஆறுமுகருக்கு ஷண்முகார்ச்சனை செய்து வீதியுலா நடத்துகின்றனர்.
திருப்பரங்குன்றத்தில் உள்ள ஷண்முகநாதருக்குப் பால்குடம் எடுத்து வந்து பெரிய அளவில் அபிஷேகம் செய்கின்றனர். இதற்கென அமைந்த அபிஷேக மேடையை அபஷேகக் குறடு என்று அழைக்கின்றனர். ஷண்முகப் பெருமானுக்கு அன்று செய்யப்படும் பால் அபிஷேகம் சாதாரண நாளில் செய்வதை விடப் பன்மடங்கு பலன் தருவதாகும். முருகனுக்கு விசாகன் என்னும் பெயர் இருப்பது போலவே மயிலுக்கும் விசாகம் என்பது பெயர். இதற்கு வி – மேலாக : சாகன் – எங்கும் சஞ்சரிப்பது என்பது பொருள்.
வைகாசி விசாகம் முதன்மையாக முருகப்பெருமானின் அவதாரத்தைக் கொண்டாடுகையில், இது எமதர்மராஜனின் அவதார நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் முருகப்பெருமானின் அருளும், நீண்ட ஆயுளும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் உஷ்ண சாந்தி உற்சவம் (தெய்வத்தை குளிர்விக்கும் விழா) என்ற தனித்துவமான சடங்கு நடத்தப்படுகிறது. இந்த சடங்கின் போது, கருவறை நீரால் நிரப்பப்பட்டு, தெய்வம் குளிர்விக்கப்படுகிறது. இந்த நாளில் இறைவனுக்கு சிறுபயறு பாயசம், அப்பம் மற்றும் நீர்மோர் போன்ற பிரசாதங்கள் படைக்கப்படுகின்றன.
வைகாசி விசாகம் ஞானேஸ்வரி (ஞான தேவி) என்று போற்றப்படும் பராசக்தி தேவிக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், அன்னை கற்பகவல்லி வைகாசி விசாகத்தன்று ஞான பரமேஸ்வரியாக தரிசனம் தருகிறார். இந்த நாளில், அவள் இடுப்பில் “ஞான வாள்” ஏந்தியவாறு காட்சியளிக்கிறார். இந்த புனித வாள் பக்தர்களின் அறியாமையை (அஞ்ஞானத்தை) வேரோடு அறுக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த தனித்துவமான தரிசனம் வேறு எந்த கோவிலிலும் காணக்கிடைக்காத அரிய காட்சியாகும்.
Also read,